விஐபி பூஜையறை
கருத்துகள்
15:42:46
Tuesday
2012-05-08
வயலின் இரட்டையர்களில் (லலிதா-நந்தினி) ஒருவரான லலிதா, தம்முடைய ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். தினமும் நான் வயலின் வாசிக்கறது வெறும் பயிற்சி அல்ல; என்னைப் பொறுத்தவரை அதுவே பூஜைதான். ஹம்ஸத்வனி, கல்யாணின்னு ஒவ்வொரு ராகத்தையும் வாசிக்கும்போது அந்தந்த ராகப் பூக்களை மானசீகமாக இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த பூஜையை இறைவனும் அங்கீகரிக்கிறார் என்றே நினைக்கிறேன். காரணம், ஒருமுறை பிள்ளையாருக்கு அறுகம்புல் போட்டு, ஹிந்தோள ராகத்தில் ஒரு பாட்டு பூஜையை நான் செய்தேன்; அடுத்த நாள் கோயமுத்தூர்ல கச்சேரி முடிஞ்சு அவங்க தந்த பரிசு – தஞ்சாவூர் ஓவிய பாணி பிள்ளையார்! என் பூஜை மண்டபத்தின் இருபுறங்களிலும் காஞ்சி பெரியவரும் சாந்தானந்த சுவாமிகளும் ஆசியளிக்கறாங்க. அனுமனை நவவியாகரண பண்டிதர்ம்பாங்க. அவரும் என் பூஜையறையை சிறப்பிக்கிறார். எங்க குடும்ப நண்பர் ரவிசங்கர் சங்கீத மும்மூர்த்திகள் பொம்மைகளை எனக்கு பரிசளித்தார். அந்த பொம்மைகளையும் நான் பூஜை செய்துகிட்டு வர்ரேன். அந்த மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் அவதரித்த இடத்தில் நடந்த போட்டியில் நானும் என் சகோதரி நந்தினியும் தங்க காமாட்சி பதக்கத்தை பரிசா பெற்றோம். அதை காஞ்சி மகாசுவாமிகள் ஆசிர்வதித்து அளித்தார். அதோடு ஒரு மாதுளம்பழ பிரசாதத்தையும் தன் தலையில் சில விநாடிகள் வைத்துக்கொண்டு, பிறகு பிரசாதமாகத் தந்தது மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பதக்கமும் என் பூஜையறை பொக்கிஷம்தான்.
அதேமாதிரி, காமாட்சி அம்மன், ராஜமாதங்கி, ஹயக்ரீவர், கூத்தனூர் சரஸ்வதின்னு கலை தெய்வங்கள் என் பூஜையறையில் நிறைந்திருக்காங்க. என்னோட அம்மா சுப்புலட்சுமி முத்துசாமியும் தாத்தா லட்சுமிநாராயண ஐயரும் என்னோட குருக்கள். தாத்தா வெளியூரில் இருந்த ஒரு சமயம் எங்களுக்கு பிரஞ்சு கலாசார கழகத்தில் வாசிக்க அழைப்பு வர அரங்கேற்றமே ஆகாத நிலையில் தாத்தா எங்களுக்கு தொலைபேசியிலேயே வாழ்த்து சொல்லி சென்னை-பெசன்ட் நகர் பிள்ளையார் கோயிலில் இரண்டு பாடல்கள் வாசித்து விட்டு பின் அந்த வாய்ப்பை ஒத்துக் கொள்ளச் சொன்னார். அதன்படி நாங்கள் அங்கு கச்சேரி செய்தோம். அதாவது எங்களோட அரங்கேற்ற கச்சேரி நடந்தது ஒரு பிள்ளையார் கோயிலில். ஆடியன்ஸ் – பிள்ளையாரும் நாலைந்து பக்தர்களும்! ஆனால் அடுத்த வாய்ப்பான கலாசார கழக கச்சேரியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்!
ஒரு சிவராத்திரி தினத்தன்று, காசியில், கங்கை நதியில், மிதக்கும் மேடையில் எங்கள் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார், ‘அன்னலட்சுமி’ சாந்தானந்தர். ஜொலிக்கும் தீபங்களிடையே படிகளில் மக்கள் அமர்ந்து எங்கள் கச்சேரியைக் கேட்டதை என்னால மறக்கவே முடியாது. அதேபோல் ப்ளோம் ஃபான்டெய்ன் எனும் தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியாவிலிருந்து சென்று முதன்முதலில் நான் கச்சேரி செய்ததை அந்நாட்டு பாராளுமன்றத்திலேயே அறிவித்ததும், லண்டன் பிபிசியில் அதே போன்று முதன்முதலில் கச்சேரி செய்ததும் புதுக்கோட்டை சாந்தானந்தரின் அருளே. தயானந்தர் உடல் நலம் குன்றி ஓய்வெடுத்தபோது அவருக்காக பிரத்யேகமாக கச்சேரி செய்ததும் சத்யசாய்பாபா முன் இரண்டு மணி நேரம் வாசித்ததும் நாங்கள் செய்த பாக்கியமே. சாந்தானந்தர் ஆதியில் வழிபட்ட புவனேஸ்வரி விக்ரகபடம், கோல்ஹாபூர் மகாலட்சுமி, என் குலதெய்வம் பெரியாண்டவர், என் பெற்றோர் தந்த சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோர் என் பூஜை குடும்பத்து உறுப்பினர்கள்! ரஜினிகாந்த், தன் அறுபதாம் கல்யாணத்தன்று அவர் வீட்டில் நாங்கள் செய்த கச்சேரியைப் பாராட்டி அளித்த பாபா டாலரையும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். ஒவ்வொரு முறையும், ‘எங்களுக்குள் அமர்ந்து நீங்கள்தான் வாசிக்கிறீர்கள்’ என்று சாந்தானந்தரை மானசீகமாக வேண்டிக்கொண்டுதான் கச்சேரியை ஆரம்பிப்போம். எங்கள் வயலின் பெட்டியில்கூட அவர் படத்தைத்தான் வைத்திருக்கிறேன்.
குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை; திருவருள் இருந்தால் குறைவொன்றும் இல்லை என்பது என் திடமான நம்பிக்கை. பார்க்க முடியாத கடவுளை அந்த குருவைப் பார்ப்பதன் மூலம் தரிசிக்கும் நிறைவைப் பெறுகிறேன்.
-ந.பரணிகுமார் படம்: ரமேஷ்